நெஞ்சார்ந்த நன்றிகள்!

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் இன்று நல்ல கத்தோலிக்கர்களாக இருப்பதற்கு நமது பெற்றோர்களும் அவர்களது பெற்றோர்களுமே காரணம். அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்ற கத்தோலிக்க பாரம்பரியங்கள் நம்மை இன்றளவும் நமது கத்தோலிக்க விசுவாசத்தில் காப்பாற்றி வருகிறது. 

நம்முடைய இணையதளம் catholictamil.com ஆண்டவருடைய கிருபையால் ஆறாவது ஆண்டில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. ஐந்து வருடத்தில் மிகப் பெரிய வளர்ச்சி! களஞ்சியம் போன்ற இணையதளம், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள், 450க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 7,500க்கும் மேற்பட்ட புத்தக தலைப்புகள், 1,00க்கும் மேற்பட்ட ஆலய வரலாறுகள், 20,000க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள், 30,000க்கும் மேற்பட்ட தெலுங்கு பாடல்கள், 11 பைபிள்கள், 1,000க்கும் மேற்பட்ட வீடியோக்கள், 5 அப்ளிகேஷன்கள், 14 தளங்கள், 1,40,00,000க்கும் மேற்பட்ட உபயோகிப்பாளர்கள்! ஐந்து வருடத்தில் ஒரு இணையதளம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதென்றால் கடவுளின் அருட்கரமும், தேவ பராமரிப்புமே முக்கிய காரணம். 

30.மார்ச்.2018-ல் பெரிய வெள்ளிக்கிழமையன்று நமது இணையதளத்திற்கு அடிக்கோலிடப்பட்டது. 18.ஆகஸ்ட் 2018-ல் catholictamil.com என்னும் பெயரில் டொமைன் மற்றும் லைசென்ஸ் வாங்கப்பட்டு USA இணைய சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டது. இன்று 12 சர்வர்கள் மூலமாக 149 நாடுகளில் உலகமெங்கும் தடையின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது!

பிரான்ஸ் நாட்டின் சேவை மற்றும் சட்ட முறைப்படி வானொலி ஒலிபரப்பு லைசென்ஸ் பெறப்பட்டு 15.ஜுன்.2019-ல் முதல் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. அருட்தந்தை M.W.பிரவீன் அவர்கள் நேரலை திருப்பலிக்கு அனுமதியளித்து உலகெங்கும் திருப்பலிகளையும் நமது பங்கின் மறை நிகழ்வுகளையும் ஒலிபரப்ப பெருந்துணை புரிந்தார்கள். உலகிலேயே 320 KBPS HD+ தரத்தில் ஒலிபரப்பாகும் ஒரே தமிழ் இணைய வானொலி என்ற பெருமையைக் கொண்டுள்ளது! இன்று 110 நாடுகளில் வாழும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நமது தேவமாதா சர்வதேச வானொலியைக் கேட்டுப் பயனடைகின்றனர்.

திரு.ஜோஸ் அவர்கள் நம்முடன் இணைந்து சுமார் 1,000-க்கும் அதிகமான ஆலயங்களின் விவரங்களைக் கொடுத்து நம்முடைய இணையதளத்தை மேலும் விரிவுபடுத்த பெருந்துணை புரிந்தார். ஆலய வரலாறுகளுக்காக தனியே ஒரு இணையதளம் 06.அக்டோபர்.2019-ல் உருவாக்கப்பட்டது.

20-பிப்ரவரி.2022-ல் அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களும் அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்களும் இணைந்து புத்தக மற்றும் வானொலி அப்ளிகேஷன்களை வெளியிட்டார்கள். இன்று புத்தக அப்ளிகேஷனில் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களும், வானொலியில் 50,000-க்கும் மேற்பட்ட பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

அருட்தந்தை M.W.பிரவீன் அவர்கள் மயிலை மாதா ஆன்மீகவியல் குருமடத்திற்கு அதிபர் தந்தையாக பணிமாற்றம் பெற்று சென்றுவிட்ட பிறகு அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்கள் கீழச்சேரி பங்கிலிருந்து நமக்கு பெருந்துணை புரிந்து வருகின்றார்கள். பணிமாற்றத்திற்குப் பிறகும் இன்றுவரை அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களும் அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்களும் இணைந்து நமது தளங்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருந்து எங்கள் அனைவரையும் வழிநடத்தி வருகின்றனர்.

14.ஆகஸ்ட்.2022-ல் அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்களால் நமது பைபிள் இணையதளமும், பைபிள் அப்ளிகேஷனும் வெளியிடப்பட்டன. பைபிள் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் வண்ணம் 11 பைபிள்களை வசனத்துக்கு வசனம் ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியுடன் உலகிலேயே இரண்டாவது அப்ளிகேஷனாக வெளிவந்தது. அன்றைய தினத்திலேயே kilachery parish இணையதளமும் வெளியிடப்பட்டது.

தற்போது பதிப்பகத் துறையில் கால் பதிக்கும் எண்ணத்துடன் நமது முதல் புத்தகமாக நரக சத்தியம் புத்தகத்தை நமது ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்கும் இரண்டு அருட்தந்தையர்களும் இணைந்து வெளியிட்டதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

முதற்கண் நமது ஆன்மீக வழிகாட்டிகளான அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களையும் அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் தென் மாவட்டங்களின் வசிக்கும் நமது அட்மின்களை வழிநடத்தும் வேளாங்கண்ணி திருத்தலப் பேராலயத்தின் அருட்தந்தை செபஸ்டியன் அவர்களுக்கும், திருநெல்வேலி அருட்தந்தை அல்போன்ஸ் அவர்களுக்கும், பழைய புத்தகங்களை சேகரிப்பதில் பெருந்துணை புரிந்து வரும் மீனவன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அருள்மணி அவர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றோம்.

சட்ட ரீதியான பிரச்சினைகளை நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு ஆலோசனைகள் தந்து துணைநிற்கும் வழக்கறிஞர்களான 

திரு. G.அலெக்ஸ் பென்சிகர். Madras High Court.
திரு. J.அமல்ராஜ். Madras High Court.
திரு. P.D.சுஜித். Madras High Court.
திரு. M. சுனில்ராஜ். Supreme Court of India, New Delhi. அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது முதல் வெளியீட்டான நரக சத்தியம் புத்தகத்தை மொழிபெயர்த்த திரு.ரோஜர் மொந்தினி அவர்கள் நமது இணையதளத்தின் மொழிபெயர்ப்பாளராக இருந்து ஆங்கிலம் மற்றும் இலத்தீன் மொழிகளிலிருந்து எண்ணற்ற பக்கங்களை நமது இணையதளத்தில் சேர்க்க பெருந்துணை புரிந்துள்ளார். சகோதரருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது புத்தக அப்ளிகேஷனுக்கு ரூ 1,00,000, பைபிள் தளங்களுக்கு ரூ 2,00,000, புத்தக வெளியீட்டிற்கு ரூ 1,00,000, போன்ற அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, மேலும் நமது இணையதளங்களின் மாதாந்திர செலவினங்களையும் தங்களின் பங்களிப்புகளாக கொடுத்து பொருளுதவியாலும், ஜெபத்தினாலும் இந்தத் தளங்களைத் தாங்கிக்கொண்டு இருக்கும் அட்மின்கள் மற்றும் கத்தோலிக்க விசுவாசிகள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்

நமது தளங்களை வடிவமைத்துக்கொடுத்து இணையத்தில் பராமரித்துவரும் 

திரு. M.Sunilraj. MSJ Technologies India Pvt Ltd.
திரு. Chellia, திரு. Guruprasad. Dreamguys Technologies Pvt Ltd. Malaysia.
திரு. Rajan. ELROI Software Solutions. 
இவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு இருதய ஆண்டவர் பாதம் நமது நன்றிகளை சமர்ப்பித்துவிட்டு, நமது இணையதளத்தின் முதல் வெளியீடான நரக சத்தியம் புத்தகத்தை தங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட திருக்கரங்களால் வெளியிட்ட அருட்தந்தையர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்...

நமது Catholic Tamil தளங்கள் உங்களின் மேலான பயன்பாட்டிற்கு...

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! எங்களோடு உடனிருந்து எங்கள் அட்மின்கள் அனைவருக்காகவும் சிறப்பாக ஜெபித்து எங்களுக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்தும் அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களின் ஆசீரோடும், எங்களோடு துணைநிற்கும் அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் மேலான வழிகாட்டுதல்களோடும் நமது புதிய தளங்களை வெளியிட்டு அனைத்தையும் இலவசமாகவே கத்தோலிக்க விசுவாசிகளிடம் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பயன்பெற அன்போடு வேண்டுகிறோம்.

 
 

நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது.

பழைய ஏற்பாட்டில், தேவாலய குருக்களின் ஆதரவுக்காகவும், வேதத்தைப் பேணுவதற்காகவும் சர்வேசுரன் ஏற்படுத்திய ஒரு விசே­ சட்டம் இருந்தது.  புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் தமது ஊழியர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ, அவர்களால் ஆதரிக்கப் பட வேண்டும் என்று கட்டளையிட்டார்.  “கோவில் பணிவிடைக்காரர் கோவிலுக்குரியவைகளில் புசிக்கிறார்கள் என்றும், பீடத்தின் பரிசாரகர்கள் பீடத்துக்கு உரியவைகளில் பங்கடைகிறார்கள் என்றும் அறியீர்களோ? அவ்வாறே, சுவிசே­த்தைப் பிரசங்கிக்கிறவர்களும் சுவிசே­த்தினாலே பிழைக்கும்படி ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார்  (1 கொரி. 9:13‡14). எனவே, தேவ கட்டளைப்படி, தங்களால் இயன்ற அளவில் விசுவாசிகள் தங்கள் மேய்ப்பர்களுக்குத்  தேவையானவைகளைத் தர கடமைப் பட்டிருக்கிறார்கள். 

இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான முறை அந்தந்தக் காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது.  திருச்சபையின் தொடக்க காலங்களில் இருந்தது போலவே, இன்றைய நாட்களிலும் மக்களின் காணிக்கைதான் ஏறத்தாழ திருச்சபையின் ஒரே நிதி ஆதாரமாக இருக்கின்றது.  மேலும், குருக்கள் கடவுளுக்குரியவையும், ஆத்துமங்களின் பராமரிப்புக்கு உரியவையுமான காரியங்களுக்காக அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் தங்கள் பிழைப்புக்காக உலகத்தன்மையான வேலைகளில் ஈடுபடுவது தடை செய்யப் பட்டிருக்கிறது.  எனவே, திருச்சபை தனது ஆறாம் கட்டளையில், தனது தெய்வீக ஸ்தாபகரால் விசுவாசிகள் மேல் சுமத்தப்பட்ட ஒரு கடமையை அவர்களுக்கு நினைவு படுத்துகிறது.

நீதியின்படி, குருநிலையினர்  தங்கள் மக்களால் ஆதரிக்கப்பட உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் சட்டபூர்வமான அதிகாரத்தால் ஒரு பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் படுகிற குருக்கள் விசுவாசிகளின் எல்லாத் தேவைகளிலும் அவர்களுக்கு உதவுகிறார்கள்.

திருச்சபையின் இக்கட்டளை  மிகக் கண்டிப்பான ஒன்று.  ஆனாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தக் கட்டளையை அனுசரிக்கத் தவறுவதால் சாவான பாவம் கட்டிக் கொள்ளப் படுகிறதா என்பதைத் தீர்மானிப்பது கடினம்.  அத்தகைய சூழலில் ஒரு பங்குக் குருவானவர் எந்த அளவு தேவையில் இருக்கிறார், அவருக்கு உதவி செய்யத் தவறுகிற பங்கு விசுவாசியின் நிதி நிலைமை என்ன ஆகியவற்றை அது பெருமளவுக்கு சார்ந்திருக்கிறது.  ஆயினும், பல வருடங்களாகத் தங்கள் வேதக் கடமைகளை அசட்டை செய்து வரும் அக்கறையற்ற கத்தோலிக்கர்கள் தங்கள் அயலார்களுக்குத் துர்மாதிரிகையாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் திருச்சபையின் ஆறாம் கட்டளைக்கு எதிராக, கடமையில் தவறுவதாகிய ஒரு சாவான பாவத்தையும் கட்டிக் கொள்கிறார்கள்.

திருச்சபையின் மேய்ப்பர்கள் நன்கு பராமரிக்கப் பட வேண்டும், தேவாலயங்களும், பள்ளிகளும் கட்டப்பட வேண்டும், தேவ வழிபாட்டோடு தொடர்புள்ள அனைத்தும் தகுதியுள்ள முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மட்டும் இந்த திருச்சபைக் கட்டளையின் நோக்கமல்ல, மாறாக, இந்தப் பூலோகத்தில் கிறீஸ்து அரசருடைய இராச்சியம், ஆத்துமங்களின் இரட்சிப்பிற்காக எங்கும் பரவ வேண்டும் என்பதும் அதன் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.  குருநிலையினரையும், விசுவாசிகளையும், பிறர் சிநேகத்தின் கடடுக்களால் ஒன்றிப்பதும் இந்தக் கட்டளையின் நோக்கமாக இருக்கிறது.  ஏனென்றால் இந்தப் பரஸ்பர நேசம் பலமுள்ளதாக இருக்கிற இடங்களில் எல்லாம், கத்தோலிக்க விசுவாசம் செழித்து வளர்ந்து பரவுகின்றது.   குருக்கள் தங்கள் பங்கு மக்களின் ஆதரவுக்கு பிரதிபலனாக, அவர்களுக்குப் போதுமானதைத் திருப்பிச் செலுத்துவதில்லையா? ஏனென்றால் அவர்கள் தங்கள் பங்கு மக்களின் ஞானத் தேவைகள் அனைத்திலும் அவர்களுக்கு உதவும்படி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள் அல்லவா?  விசுவாசிகள் திருச்சபையின் மீது பொழிகிற சகல உபகாரங்களும், அவற்றைப் பெற்றுக் கொள்வோருக்கு மட்டுமல்லாமல், அவற்றைத் தருபவர்களுக்கும் நன்மை விளையச் செய்பவையாக இருக்கின்றன.  ஏனென்றால் திருச்சபையும், அது  கொண்டுள்ள சகலமும், மக்களின் நன்மைக்காகவே உலகில் நிலைத்திருக்கின்றன.

தேவ கற்பனைகளை விசுவாசிகள் அனுசரிப்பதை உறுதி செய்வதற்காகவும், மனிதனின் நிலையற்ற தன்மைக்கு எதிரான ஒரு தடையை எழுப்பவும், அவனது பலவீனத்தில் அவனுக்கு உதவவும், தனது சிருஷ்டிகரின் மட்டிலும், அயலார்கள் மட்டிலும், தன் மட்டிலும் அவனுக்குள்ள கடமைகளை அவனுக்கு நினைவுபடுத்தவும், தனது நித்திய இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அவன் மேற்கொள்ள வேண்டிய வழிகளை அவன் அறியச் செய்யவுமே பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை இந்த ஆறு கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சபையின் வார்த்தைகளுக்குச் செவி சாய்த்து, சாகும் வரை கீழ்ப்படிதல் உள்ளவர்களாக, கிறீஸ்துநாதரின் நல்ல வீரர்களாக உழைப்பவர்கள் அனைவரும், “சர்வேசுரன் தம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவிய கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள்” (இயாகப்பர் 1:12).

விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவுமுறையாரோடு கலியாணஞ் செய்யாதிருக்கிறது.

திருமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும், கணவன் மனைவியாக வாழ்வதாகத் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஆகும்.  மரணம் வரை ஒன்று சேர்ந்து வாழும் கடமையை இந்த ஒப்பந்தம் அவர்கள் மீது சுமத்துகிறது.   “சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக” என்று சேசுநாதர் கூறியபோது (மத்.19:6) அவர் இதையே தெளிவு படுத்தினார்.

சேசுநாதர் திருமணத்தை ஒரு தேவத் திரவிய அனுமானமாக உயர்த்தினார். அர்ச். சின்னப்பர் இந்த மெய்விவாகத்தை ஒரு மாபெரும் தேவத் திரவிய அனுமானம் என்கிறார்.  மெய்விவாகம் ஜீவியரின் தேவத் திரவிய அனுமானமாக இருப்பதால், அது தேவ இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் பெறப்பட வேண்டும். அதாவது திருமணம் செய்யும் ஆணும், பெண்ணும் சாவான பாவம் இல்லாமல் இருக்க வேண்டும்.  மெய்விவாகம் என்னும் தேவத் திரவிய அனுமானம் கணவனுக்கும் மனைவிக்கும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தேவையான வரப்பிரசாதத்தைத் தருகிறது; தங்கள் பிள்ளைகளைத் தேவ         சிநேகத்திலும், தேவ பயத்திலும் வளர்க்க அவர்களுக்கு உதவுகிறது.

சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப் படாமல் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஓர் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பது போலவே, மெய்விவாக அனுமானத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல் ஒரு கத்தோலிக்க ஆணும் பெண்ணும் செய்து கொண்ட திருமணம் செல்லாது என அறிவிக்கிற அதிகாரம் திருச்சபைக்கு இருக்கிறது.

ஒரு  திருமணம், செல்லத்தக்க கத்தோலிக்க திருமணமாக இருப்பதற்கு, ஆணும் பெண்ணும், இரண்டு சாட்சிகள் முன்னிலையில், பங்குக் குருவுக்கு முன்பாக, அல்லது அவரால் முறைப்படி அனுமதிக்கப் படுகிற ஒரு குருவுக்கு முன்பாக, தங்கள் சம்மதத்தைத் தெரிவிப்பது அவசியம்.  எனவேஒரு அரசு அதிகாரியின் முன்போ, அல்லது கத்தோலிக்கரல்லாத ஓர் ஊழியரின் முன்போ நிகழ்கிற ஒரு கத்தோலிக்கனின் திருமணம், சர்வேசுரனுடைய பார்வையில் திருமணமே அல்ல.  ஏனெனில் மெய்விவாக அனுமானத்திற்கென கத்தோலிக்கத் திருச்சபை ஏற்படுத்தியுள்ள நிபந்தனைகளுக்கு அவன் அல்லது அவள் கட்டுப்படவில்லை.

அடுத்ததாக, ஒரு திருமணம் செல்லுபடியாக, ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளவர்களாகவும், சுதந்திரமான விதத்தில் தங்கள் சம்மதத்தைத் தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். விவாக ரத்து செய்து கொண்ட, அல்லது, திருமண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒர் ஆளுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள உரிமை இல்லை.

இறுதியாக, திருமணத்தைச் செல்லாததாக ஆக்கக் கூடிய விக்கினங்கள் எதுவும் இருக்கக் கூடாது.  இரண்டு விதமான விக்கினங்கள் உள்ளன.  அவை, தடை செய்கிற விக்கினம் மற்றும் செல்லாததாக்குகிற விக்கினம் ஆகும்.

தடை செய்கிற விக்கினம் என்பது, விசே சலுகை பெறப்படாத நிலையில்,  திருமண ஒப்பந்தத்தை சட்டத்திற்கு எதிரானதாக ஆக்குகிறது.  திருமணம் செய்த இருவரில் ஒருவர் கன்னிமை வார்த்தைப்பாடு, அல்லது உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், அல்லது, துறவற அந்தஸ்தில் சேரும் வார்த்தைப்பாடு என்பன போன்றவற்றில் ஏதாவது ஒரு வார்த்தைப்பாடு கொடுத்தவராக இருந்தால், அவர் திருமணம் செய்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது.

கலப்புத் திருமணம் மற்றொரு தடை செய்கிற விக்கினம் ஆகும்.  கத்தோலிக்கர் ஒருவரும், மற்றொருவர் ஏதாவது ஒரு பதித சபையில், அல்லது பிரிவினை சபையில் ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினராக இருக்கும் மற்றொருவரும் திருமணம் செய்து கொள்வதைத் திருச்சபை மிகக் கடுமையான முறையில் தடை செய்கிறது.  இத்தகைய திருமணங்கள் வேத அலட்சியப் போக்கிற்கும், விசுவாச இழப்பிற்கும், குழந்தைகளின் ஞான உபதேசத்தில் அசட்டைத்தனத்திற்கும் இட்டுச் சென்று விடும் என்பதால் திருச்சபை கலப்புத் திருமணங்களைத் தடை செய்கிறது.  சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டுமே இந்த விக்கினத்திற்குத் திருச்சபையானது விலக்கு அளிக்கிறது. கலப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நியாயமானதும், தீவிரமுள்ளதுமாகிய காரணம் இருக்க வேண்டும்.  திருமணம் செய்து கொள்ளப் போகும் இருவரில் கத்தோலிக்கர் அல்லாத ஒருவர், கத்தோலிக்கராக இருக்கிற மற்றவருக்கு, விசுவாசத்தை அனுசரிப்பதில் எந்தத் தடையும் விதிப்பதில்லை என்ற உத்தரவாதம் தர வேண்டும். மேலும்  அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கிற குழந்தைகள் அனைவரும் கத்தோலிக்க ஞான ஸ்நானமும், கத்தோலிக்க வேதக் கல்வியும் மட்டுமே பெறுவார்கள் என்று திருமணம் செய்து கொள்ளப் போகும் இருவரும் வார்த்தைப்பாடு தர வேண்டும்.

செல்லாததாக்குகிற விக்கினம் ஒரு திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது.  திருமணத்தைச் செல்லாததாக்குகிற விக்கினங்கள், குறைந்த வயது, ஏற்கனவே உள்ள திருமண பந்தம், இதர மதத்தினரோடு திருமணம், ஆள் கடத்தித் திருமணம், உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், இரத்த உறவு, நெருங்கின உறவு, ஞானஸ்நானத்தின் போது ஏற்பட்ட ஞானத் தாய் அல்லது உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், ஞானத் தாய் அல்லது ஞானத் தகப்பன், ஞானப் பிள்ளை என்னும் உறவு ஆகியவை ஆகும்.

திருமணத்திற்கு முந்திய மூன்று அடுத்தடுத்த ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குக் குருவானவர் திருமண அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால், தங்கள் திருமணத்திற்கு சர்வேசுரனுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறவர்கள், தங்கள் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே தங்கள் பங்குத் தந்தைக்கு அது பற்றி அறிவித்து விட வேண்டும்.

கத்தோலிக்கர்கள் ஆண்டின் எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.  ஆனாலும் ஆகமன காலம், தவக்காலம் ஆகிய தவ, ஒறுத்தல் முயற்சிகளின் காலங்களில், அதாவது, ஆகமன காலத்தின் முதல் ஞாயிறு முதல் கிறீஸ்துமஸ் திருநாள் முடியவும், சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு ஞாயிறு முடியவும், திருமணங்கள் அர்ச்சிக்கப் படுவதைத் திருச்சபை தடை செய்கிறது.    திருமணத்தை அர்ச்சித்தல் என்பதற்கு திருமணப் பூசையை அதற்குரிய திருமண மந்திரித்தலோடு நிறைவேற்றுவது என்பது பொருள். 

தேவ இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் மெய்விவாக தேவத்திரவிய அனுமானத்தைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவ இஷ்டப் பிரசாதம் அதிகரிக்கிறது.  மேலும் திருமண அந்தஸ்துக்கு அவசியமான உதவி வரப் பிரசாதங்களைப் பெறவும் அவர்கள் உரிமை பெறுகிறார்கள்.  இந்த உதவி வரப்பிரசாதங்கள், பரஸ்பர நேசத்தை வளர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையைப் பேணவும், குழந்தைகளுக்கு வேதக் கல்வி வழங்கவும், திருமண வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தாங்கிக் கொள்ளவும் அவசியமானவை.

சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.

பழைய ஏற்பாட்டில், தவ நாட்கள், உபவாசம், சுத்தபோசனம் ஆகியவற்றின் மூலமாக அர்ச்சிக்கப் பட்டன.  உபவாசம், பாவப் பரிகாரத்திற்காகச் செய்யப் படுகிற தவ முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.  ஆகையால் “இப்போதாவது உபவாசம் இருந்து அழுது புலம்பிக் கொண்டு உங்கள் முழு இருதயத்தோடும் நம்மிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர் (யோவேல் 2:12).  மோயீசனும், எலியாசும் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தனர்.  அரசரும், தீர்க்கதரிசியுமாகிய தாவீது அடிக்கடி தமது உபவாசத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்; தானியேல், எஸ்திராஸ், எஸ்தர் ஆகியோரும் தங்கள் உபவாசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.  மோயீசனின் சட்டத்தில் சுத்தபோசனமும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.  சில குறிப்பிட்ட மிருகங்களின் இறைச்சியை உண்பதற்கு யூதர்கள் அனுமதிக்கப் படவில்லை.  தானியேலும் அவருடைய தோழர்களும் பாபிலோன் அரசவையில் இருந்த போது, விலக்கப் பட்ட மாமிசங்களை உண்பதற்குப் பதிலாக, காய்கறிகளையும் தண்ணீரையும் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தனர்.

நம் ஆண்டவரும் கூட நமக்கு உபவாசத்திற்கு அற்புதமான முன்மாதிரிகையைத் தந்திருக்கிறார்.  அவர் தமது பொது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் நாற்பது பகலும், நாற்பது இரவும் உபவாசமாயிருந்தார்.  சில வகைப் பேய்களை ஜெபத்தாலும் உபவாசத்தாலும் மட்டுமே ஓட்ட முடியும் என்று அவர் தம் சீடர்களிடம் கூறினார்.  அவர்கள் குருக்களை அபிஷேகம் செய்த போது, உபவாசமிருந்து ஜெபித்ததாக நாம் அப்போஸ்தலர் நடபடியில் வாசிக்கிறோம்.  ஆதிக் கிறீஸ்தவர்கள் மீது அர்ச். இராயப்பர் சுத்த போசனக் கடமையையும் சுமத்தினார். விக்கிரகங்களுக்குப் படைத்ததை உண்ணக் கூடாதென்று அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார் (அப். 15:29).

விசுவாசிகள் தங்களை ஒறுக்கும்படியாகவும், தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்படியாகவும், சரீர சோதனைகளுக்கு எதிராகத் தங்களைப் பலப் படுத்தும்படியாகவும், ஒருசந்தி, சுத்தபோசனம் அனுசரிக்கும்படி திருச்சபை அவர்களுக்குக் கட்டளை யிடுகிறது.   நம்மை நாமே மறுதலிக்கவில்லை என்றால், நம் சுபாவமான நாட்டங்கள் நம்மைப் பாவத்திற்கு இட்டுச் சென்று விடும்.  ஜென்மப் பாவத்தின் விளைவு இது. “ஒருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அனுதினமும் சுமந்து கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான்” என்று நம் ஆண்டவரும் இதைப் பற்றியே கூறியிருக்கிறார்.


ஒருசந்தி:  ஒருசந்திக்குரிய சட்டம் உட்கொள்ளப் படும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு தடவை மட்டும், அதுவும் நண்பகலுக்குப் பிறகு முழு உணவு உட்கொள்வதில் அது அடங்கியிருக்கிறது.  உணவின் அளவு மற்றும் வகை ஆகிய காரியங்களில் அந்தந்த நாட்டு வழக்கப் படி, காலையிலும் மாலையிலும் சிறிது உணவு உட்கொள்வதை ஒருசந்தி தடுக்கவில்லை.  உபவாசம் இருக்கக் கடமையுள்ளவர்கள் காலையிலும், இரவிலும் வழக்கமாகத் தாங்கள் உண்ணும் உணவில் பாதிக்கும் குறைவாக உணவு உண்பதை அது அனுமதிக்கிறது. காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்துவது ஒருசந்தி சட்டத்தின் கீழ் வரவில்லை.

இருபத்தொரு வயது முதல் அறுபது வயது வரை உள்ள விசுவாசிகள் மட்டுமே ஒரு சந்தி அனுசரிக்கக் கடமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  நோய், வறுமை, கடின வேலை அல்லது வேறு ஏதாவது ஒரு நல்ல காரணத்திற்காக அவர்கள் ஒருசந்தியிலிருந்து விலக்குப் பெற்றிருந்தால், இந்தக் கடமை அவர்களைக் கட்டுப் படுத்தாது.

தவக்கால வெள்ளிக் கிழமைகள், தவ நாட்கள் பெந்தேகோஸ்தே  திருநாள், சகல அர்ச்சிஷ்டவர்கள் திருநாள், கிறீஸ்துமஸ் ஆகிய திருநாட்களுக்கு முந்தின நாட்கள் ஆகியவை ஒருசந்தி நாட்களாகும்.

சுத்தபோசனம்:  உணவின் தன்மையைக் கட்டுப்படுத்துகிற சுத்தபோசனத்தின் சட்டமானது, மாமிச உணவுகளை உண்பதைத் தடை செய்கிறது.  ஆனாலும் முட்டை, பால், பால் பொருட்கள் மற்றும்  மிருகக் கொழுப்பால் செய்யப்பட்ட எல்லாவிதமான சுவையூட்டும் பொருட்கள் ஆகியவற்றை உண்ணத் தடையில்லை.

நோய், அல்லது வேறு ஏதாவது ஒரு நல்ல காரணத்திற்காக விலக்குப் பெற்றிருந்தால் ஒழிய, புத்தி விபரம் அறிந்த அனைவரும் சுத்த போசனச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவர்.  இந்தக் கட்டளையை மீறுவது ஒரு கனமான பாவம், ஆனாலும் தடை செய்யப் பட்ட உணவு அதிக அளவில் உட்கொள்ளப் பட்டால் ஒழிய, இந்தக் கட்டளையை மீறுவது ஒரு சாவான பாவமாகாது.


இன்றைய  ஒழுங்குகள்

குறிப்பு: 1949 ஜனவரியிலிருந்து பாப்பரசர் 12-ஆம் பத்திநாதர், ஒருசந்தி, சுத்தபோசனத்தின் மீதான போருக்கு முந்தைய ஒழுங்குகளில் பலவற்றைத் தவிர்க்க ஆயர்களுக்கு அனுமதி தந்தார்.  இந்தச் சலுகையின் கண்ணோட்டத்தில், ஏழைகள், நோயாளிகள் ஆகியவர்கள் மட்டில் பிறர் சிநேகச் செயல்கள் செய்வது போன்ற வேறு செயல்களைச் செய்யும் படி பரிசுத்த பிதா விசுவாசிகளை வற்புறுத்தினார்.


தற்போதைய ஒழுங்குகள் பின்வருமாறு:

(1)  எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் சுத்த போசனம். ஆனால் கடன் திருநாட்கள், மற்றும் டிசம்பர் 26-ஆம் நாள் ஆகியவை ஒரு வெள்ளிக்கிழமையில் வருமானால் அன்று சுத்தபோசனக் கடமை இல்லை.

(2)  சாம்பல் புதன், பெரிய வெள்ளி, மற்றும் அமலோற்பவ மாதா திருநாள், கிறீஸ்துமஸ் ஆகிய திருநாட்களுக்கு முந்தின நாட்களில் மட்டும் ஒருசந்தியும், சுத்தபோசனமும் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

ஒரு முக்கியத் திருநாளுக்கு முந்தின நாள் ஞாயிற்றுக் கிழமையில் வருமானால், அன்று ஒரு சந்தி, சுத்த போசனக் கடமை இல்லை.  அமலோற்பவத் திருநாள், கிறீஸ்துமஸ் ஆகிய திருநாட்களுக்கு முந்தின நாள் ஒரு சனிக்கிழமையாக இருக்குமானால், ஒருசந்தி கிடையாது, ஆனால் சுத்தபோசனக் கடமை உண்டு.

ஒரு சந்தி, சுத்தபோசனக் கடமையிருந்து விலக்கு அளிக்கத் திருச்சபைக்கு அதிகாரம் உண்டு என்றாலும், தவம் செய்யும் கடமையிலிருந்து விசுவாசிகளை விடுவிக்க அதற்கு அதிகாரம் இல்லை.  ஏனென்றால், “தவஞ் செய்யாவிடில் நீங்களும் இவ்வாறே அழிந்து போவீர்கள்” என்று சேசு நாதரே கூறியிருக்கிறார் (லூக். 13:3).