குறிப்பு : மீன்பிடித் தொழில் உள்ள ஊர்களில், மீன் பிடிக்கும் இயந்திரங்களை மந்திரிக்கும் விழாவாக ஆண்டில் ஒரு நாளைக் கொண்டாடுவது சிறப்பு. அப்பொழுது கீழ்க்கண்டவற்றை முழுமையாகப் பயன்படுத்தலாம். படகு, கட்டுமரம், தோணி, வள்ளம் போன்ற மரக் கலங்களையோ, வலை, தூண்டில் போன்ற மீன்பிடிக் கருவிகளையோ தனித்தனியாக மந்திரிக்க, கீழ் உள்ளவற்றிலிருந்து பொருத்தமான பகுதிகளைத் தேர்ந்து கொள்ளலாம்.
தொடக்கச் சடங்கு
(பொருத்தமான புகழ்ச்சிப்பாடல் பாடலாம்.)
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: நம் ஆண்டவரின் அன்பும் அருளும் உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.
(குரு முன்னுரையாக இச்சடங்கின் உட்பொருளைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, அதில் அனைவரும் பக்தியுடன் பங்கேற்க அழைக்கிறார்.)
முதல் வாசகம்
அருள்வாக்கு தொநூ.1:1-4, 9-10, 20-23, 27-28
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு 'நிலம்' என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் 'கடல்' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்தி வாழும் உயிரினங்களையும். இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார்.
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி. "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை. உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
வேறு வாசகங்கள் :
தொநூ 7:11-12, 18-20, 23C (மரக்கலத்தை மந்திரிக்க)
திப 27:13-20, 33-40, 43b - 44 (பயணக் கப்பலை மந்திரிக்க).
பதிலுரைப்பாடல் திபா. 8:1-2, 3, 4, 5, 6, 7, 8, 9.
பல்லவி : ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
1. ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. - பல்லவி
2. உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, - பல்லவி
3. மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி
4. அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர், - பல்லவி
5. உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி
6. ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி
7. வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி
8. ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! - பல்லவி
வாழ்த்தொலி லூக். 5:5
அல்லேலூயா! "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” அல்லேலூயா.
நற்செய்தி லூக்.5:1-11
ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். சீமோன் மறுமொழியாக, "ஐயா! இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே! இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
வேறு வாசகங்கள்: யோவா. 21:1-13; மாற்.4:35-41
(இப்பொழுது குரு சுருக்கமான மறையுரை ஆற்றலாம்.)
பொது மன்றாட்டு
குரு: சகோதரர் சகோதரிகளே, நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் கடவுளில்தான். அன்றாட வாழ்க்கை நடத்தக் கடலையே நம்பியிருக்கும் நமக்கு இந்த உண்மை மிகப் பொருத்தமாகும். எனவே, அவரது பரிவன்பு மிகுந்த பாதுகாப்பு நம்மோடு என்றும் இருக்க, அவருடைய திருமகனும் நம் ஆண்டவருமாகிய கிறிஸ்து வழியாக இரந்து கேட்போம்.
1. பாவம் தவிர மற்றனைத்திலும் எங்களில் ஒருவராக இருந்து பசி தாகம், துன்ப துயரம் எல்லாம் அனுபவித்த இயேசுவே, திரை கடலோடி வாழ்வுக்கு வழி தேடும் உம் மக்களைக் கடைக் கண்ணோக்கி, கடினமான உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் அளித்து ஆதரிக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. புயலடித்துக் கொந்தளிக்கும் கடல்மீது நடந்துவந்த இயேசுவே, இடர்கள் மிகுந்த இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்கள், "அஞ்ச வேண்டாம், நான்தான்" என்னும் உமது அருள்மொழியை என்றும் எங்கள் உள்ளத்தில் இருத்தி ஆறுதல் பெறவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தூய பேதுருவின் படகில் அமர்ந்து மக்களுக்குப் போதித்த இயேசுவே, இந்த மரக்கலங்களைப் பயன்படுத்துவோர் எல்லாரும் உம்முடைய போதனைகளை என்றும் பின்பற்றி, சிறந்த கிறிஸ்தவராக விளங்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. "மனிதரைப் பிடிப்போராக உங்களை ஆக்குவேன்" என்று கலிலேய மீனவரிடம் கூறிய இயேசுவே, நாங்கள் எம் கிறிஸ்துவக் கடமைகளை நன்கறிந்து, சொல்லாலும் வாழ்க்கை முறையாலும் உமக்குச் சான்று பகரவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. ஐந்து அப்பங்களையும் இரு மீன்களையும் பெருகச் செய்து, ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இயேசுவே, நாங்களும் எங்களிடம் உள்ளவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து, அன்புள்ளம் கொண்டு வாழவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
6. தூண்டில் போட்டு மீன் பிடிக்கவும், அதன் வாயில் இருந்த காசை வரியாகச் செலுத்தவும் பேதுருவுக்குக் கற்பித்த இயேசுவே, திருச்சபையின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் எங்களாலான உதவி புரியும் தாராள மனதை அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
குரு: அன்பே உருவான எங்கள் ஆண்டவரே, மீன் வேண்டுமெனக் கேட்கும் மகனுக்கு எத்தந்தையும் பாம்பைக் கொடுக்க மாட்டான் என்று உறுதியாகக் கூறினீர்; எங்கள்மீது இரங்கி, நாங்கள் விரும்பிக் கேட்டவற்றை மட்டுமல்ல, எங்களுக்கு நலமானவை என நீர் அறிபவற்றையும் நிறைவாக அளித்து, எங்களை மன நிறைவோடு மகிழ்ந்து வாழ நாங்கள் அருள்கூருமாறு உம்மை இரந்து மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(பின்னர் படகு போன்ற மரக்கலங்களை மந்திரிக்கக் குரு சொல்வதாவது:)
குரு: மன்றாடுவோமாக:
இறைவா, உம் அடியார்களின் வேண்டுதலைத் தயவோடு ஏற்று, இந்தப் படகை (கட்டுமரத்தை..) ✠ ஆசீர்வதித்தருளும். வெள்ளப் பெருக்கால் உயிரினங்கள் எல்லாம் அழிவுற்றபோது நோவாவின் பெட்டகத்தை நீர் காத்தது போல, இப்படகையும் (…………) இதில் செல்லும் அனைவரையும் உமது வலக்கரம் காத்தருள்வதாக; அலைமோதும் கடலில் தத்தளித்த புனித பேதுருவை உம் திருமகன் கை நீட்டிப் பிடித்துக் காத்ததுபோல், இவர்களோடு உமது உதவி தவறாது என்றும் இருப்பதாக; கடும் புயலில் சிக்குண்ட தம் சீடரின் படகு மூழ்கிவிடாமல் அவர் காற்றையும் கடலையும் கடிந்து அமைதிப்படுத்தியது போல, ஆற்றல் மிகுந்த உமது அருள் துணையால் இக்கலமும் இதனைப் பயன்படுத்தும் மக்களும் இடர் அனைத்தையும் மேற்கொண்டு, நலமாகத் துறை சேர்ந்து, மகிழ்ச்சியுடன் உமக்கு நன்றிப் பண் பாடுவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(வலை, தூண்டில் போன்ற மீன்பிடிக் கருவிகளை மந்திரிக்கக் குரு சொல்வதாவது:)
குரு: மன்றாடுவோமாக:
எம் இறைவனாகிய ஆண்டவரே, உலர்ந்த நிலத்திலிருந்து நீரைப் பிரித்துக் கடலை உருவாக்கினீர்; கடலில் வாழும் மீன் இனங்களைப் படைத்து, அவை எல்லாம் மனிதரின் தேவைகளுக்கு உதவிட ஏற்பாடு செய்தீர்; திருத்தூதர்கள் வீசிய வலையை அற்புதமாக மீன்களால் நிரப்பினீர்; உம்முடைய அடியார்கள் இவர்கள் இந்த மீன் பிடிக் கருவிகளை முறையாகப் பயன்படுத்தவும், அதனால் தங்கள் உழைப்பிற்கு ஏற்றவாறு மிகுந்த மீன்பாடு பெற்று வளமுடன் வாழவும், எம் நாட்டின் கடலுணவு உற்பத்தியில் பங்கேற்கவும் அருள்வீராக. இவ்வாறு இவர்கள் இவ்வுலகில் பேறுபலன்களை மேன்மேலும் சேர்த்து, முடிவில்லாப் பேரின்பத் துறைக்கு வந்து சேரும் நல்ல கிறிஸ்துவ மக்களாகத் திகழ்வார்களாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(படகு, மற்றும் கருவிகள் மீது குரு தீர்த்தம் தெளிக்கிறார். பின்னர், அவர் இறையாசி அளித்து நிறைவு செய்வார்.)
எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவியின் ஆசீர் உங்கள் அனைவர்மீதும் இப்பொருட்கள் மீதும் இறங்கி என்றும் தங்கியிருப்பதாக.
எல்: ஆமென்.
(பொருத்தமான பாடல் பாடலாம்.)