பொருள்களை மந்திரித்தல் -2 (விரிவானது)

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருட்பாராக.

அருள்வாக்கு எபி 1:1-3

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 145:2-3, 4-5, 6-7, 8-9.

பல்லவி:  என் கடவுளே, உமது பெயரைப் போற்றுவேன்.

1. நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி 

2. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். - பல்லவி

3. அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைத்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி

4. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நம்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

குரு: இந்த …………… ஐ (பொருளை) நம் நன்மைக்காகக் கொடுத்த நம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோமாக.

(சிறிது நேரம் மெளனம்)

குரு: அனைத்தையும் உமது மகிமைக்காகவே படைத்த அனைத்துலக அரசே! எம் இறைவா! நீர் என்றும் போற்றப்படுவீராக. நாங்கள் உமது புகழுக்காகவும் பிறர் நலனுக்காகவும் உமது ஊழியத்தில் பயன்படுத்த இந்த ………… ஐ ஆசீர்வதிக்க எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(பொருள்களின்மேல் குரு தீர்த்தம் தெளிப்பார்.)

பொருள்களை மந்திரித்தல்- 1 (குறுகியது)

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, உமது வார்த்தையால் யாவும் புனிதமடைகின்றன. நீர் படைத்த இதன் (இவற்றின்) மீது உமது ஆசியைப் பொழிந்தருளும். உமது சட்டத்திற்கும் திருவுளத்திற்கும் ஏற்ப நன்றியுடன் இதை (இவற்றை)ப் பயன்படுத்துவோர் யாவரும் உமது திருப்பெயரைச் சொல்லி வேண்டுவதால், உமது அருளைப் பெற்று, உடல் நலமும் அன்ம பாதுகாப்பும் அடைவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)

புது ஏர், மாட்டு வண்டி, டிராக்டர், டிராலி மந்திரித்தல்

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

அருள்வாக்கு. இச. 8:11-14,17-18 

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துபோகாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் உண்டு நிறைவு கொள்ளும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும்போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு மிகுதியாகும்போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிடவேண்டாம்.

எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 65:8-13

பல்லவி: கடவுளே உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது.

1. மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது; நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். - பல்லவி

2. அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். - பல்லவி

3. ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலை நிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. - பல்லவி

4. புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! - பல்லவி

நற்செய்தி மாற் 4:28-29

இயேசு, கூறியது: "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது" என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

விசுவாசிகளின் மன்றாட்டு

(மன்றாட்டுக்களை தனிப்பட்ட விதத்தில் சொல்லலாம்; பின் அனைவரும் அமைதியாகச் செபிக்கின்றனர்.)

குரு: மன்றாடுவோமாக:

எல்லாம் வல்ல இறைவா, மனிதன் உழைக்க வேண்டும் என்று நீர் கட்டளையிட்டிருக்கின்றீர். உழைக்காதவன் உண்ணலாகாது என்று பவுல் அடியார் வழியாகவும் சொல்லியிருக்கின்றீர். நாங்கள் உழைக்கிறோம்; உழைப்பின் பயனை நாங்கள் உம்மிடமிருந்தே பெற்றுக் கொள்கிறோம். எங்கள் வீடு, நிலம், ஆடு மாடுகள், பொன், வெள்ளி அனைத்தும் உம் அருள் பெருக்கின் நிறைவிலிருந்து நாங்கள் பெற்றுக் கொண்டவையே! எங்கள் உழைப்புக்கு உதவியாய் இருக்கின்ற இந்தக் கருவிகளை (புது ஏர் / மாட்டு வண்டி .... ) ✠ ஆசீர்வதியும். எங்களுக்கு உடல் வலிமையையும், ஆற்றலையும் நிறைவாகத் தந்தருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் …….

எல்: ஆமென்

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)

மீன்பிடிக் கருவிகளை மந்திரித்தல்

குறிப்பு : மீன்பிடித் தொழில் உள்ள ஊர்களில், மீன் பிடிக்கும் இயந்திரங்களை மந்திரிக்கும் விழாவாக ஆண்டில் ஒரு நாளைக் கொண்டாடுவது சிறப்பு. அப்பொழுது கீழ்க்கண்டவற்றை முழுமையாகப் பயன்படுத்தலாம். படகு, கட்டுமரம், தோணி, வள்ளம் போன்ற மரக் கலங்களையோ, வலை, தூண்டில் போன்ற மீன்பிடிக் கருவிகளையோ தனித்தனியாக மந்திரிக்க, கீழ் உள்ளவற்றிலிருந்து பொருத்தமான பகுதிகளைத் தேர்ந்து கொள்ளலாம்.

தொடக்கச் சடங்கு

(பொருத்தமான புகழ்ச்சிப்பாடல் பாடலாம்.)

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

குரு: நம் ஆண்டவரின் அன்பும் அருளும் உங்களோடு என்றும் இருப்பதாக.

எல்: உம்மோடும் இருப்பதாக.

(குரு முன்னுரையாக இச்சடங்கின் உட்பொருளைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, அதில் அனைவரும் பக்தியுடன் பங்கேற்க அழைக்கிறார்.)

முதல் வாசகம்

அருள்வாக்கு தொநூ.1:1-4, 9-10, 20-23, 27-28

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.

அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு 'நிலம்' என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் 'கடல்' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்தி வாழும் உயிரினங்களையும். இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார்.

கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி. "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை. உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

வேறு வாசகங்கள் :

தொநூ 7:11-12, 18-20, 23C (மரக்கலத்தை மந்திரிக்க)

திப 27:13-20, 33-40, 43b - 44 (பயணக் கப்பலை மந்திரிக்க).

பதிலுரைப்பாடல் திபா. 8:1-2, 3, 4, 5, 6, 7, 8, 9.

பல்லவி : ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

1. ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. - பல்லவி

2. உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, - பல்லவி

3. மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

4. அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர், - பல்லவி

5. உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

6. ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

7. வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

8. ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! - பல்லவி

வாழ்த்தொலி லூக். 5:5

அல்லேலூயா! "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” அல்லேலூயா.

நற்செய்தி லூக்.5:1-11

ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். சீமோன் மறுமொழியாக, "ஐயா! இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே! இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

வேறு வாசகங்கள்: யோவா. 21:1-13; மாற்.4:35-41

(இப்பொழுது குரு சுருக்கமான மறையுரை ஆற்றலாம்.)

பொது மன்றாட்டு

குரு: சகோதரர் சகோதரிகளே, நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் கடவுளில்தான். அன்றாட வாழ்க்கை நடத்தக் கடலையே நம்பியிருக்கும் நமக்கு இந்த உண்மை மிகப் பொருத்தமாகும். எனவே, அவரது பரிவன்பு மிகுந்த பாதுகாப்பு நம்மோடு என்றும் இருக்க, அவருடைய திருமகனும் நம் ஆண்டவருமாகிய கிறிஸ்து வழியாக இரந்து கேட்போம்.

1. பாவம் தவிர மற்றனைத்திலும் எங்களில் ஒருவராக இருந்து பசி தாகம், துன்ப துயரம் எல்லாம் அனுபவித்த இயேசுவே, திரை கடலோடி வாழ்வுக்கு வழி தேடும் உம் மக்களைக் கடைக் கண்ணோக்கி, கடினமான உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் அளித்து ஆதரிக்க உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. புயலடித்துக் கொந்தளிக்கும் கடல்மீது நடந்துவந்த இயேசுவே, இடர்கள் மிகுந்த இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்கள், "அஞ்ச வேண்டாம், நான்தான்" என்னும் உமது அருள்மொழியை என்றும் எங்கள் உள்ளத்தில் இருத்தி ஆறுதல் பெறவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

3. தூய பேதுருவின் படகில் அமர்ந்து மக்களுக்குப் போதித்த இயேசுவே, இந்த மரக்கலங்களைப் பயன்படுத்துவோர் எல்லாரும் உம்முடைய போதனைகளை என்றும் பின்பற்றி, சிறந்த கிறிஸ்தவராக விளங்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. "மனிதரைப் பிடிப்போராக உங்களை ஆக்குவேன்" என்று கலிலேய மீனவரிடம் கூறிய இயேசுவே, நாங்கள் எம் கிறிஸ்துவக் கடமைகளை நன்கறிந்து, சொல்லாலும் வாழ்க்கை முறையாலும் உமக்குச் சான்று பகரவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

5. ஐந்து அப்பங்களையும் இரு மீன்களையும் பெருகச் செய்து, ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இயேசுவே, நாங்களும் எங்களிடம் உள்ளவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து, அன்புள்ளம் கொண்டு வாழவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

6. தூண்டில் போட்டு மீன் பிடிக்கவும், அதன் வாயில் இருந்த காசை வரியாகச் செலுத்தவும் பேதுருவுக்குக் கற்பித்த இயேசுவே, திருச்சபையின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் எங்களாலான உதவி புரியும் தாராள மனதை அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குரு: அன்பே உருவான எங்கள் ஆண்டவரே, மீன் வேண்டுமெனக் கேட்கும் மகனுக்கு எத்தந்தையும் பாம்பைக் கொடுக்க மாட்டான் என்று உறுதியாகக் கூறினீர்; எங்கள்மீது இரங்கி, நாங்கள் விரும்பிக் கேட்டவற்றை மட்டுமல்ல, எங்களுக்கு நலமானவை என நீர் அறிபவற்றையும் நிறைவாக அளித்து, எங்களை மன நிறைவோடு மகிழ்ந்து வாழ நாங்கள் அருள்கூருமாறு உம்மை இரந்து மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(பின்னர் படகு போன்ற மரக்கலங்களை மந்திரிக்கக் குரு சொல்வதாவது:)

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, உம் அடியார்களின் வேண்டுதலைத் தயவோடு ஏற்று, இந்தப் படகை (கட்டுமரத்தை..) ✠ ஆசீர்வதித்தருளும். வெள்ளப் பெருக்கால் உயிரினங்கள் எல்லாம் அழிவுற்றபோது நோவாவின் பெட்டகத்தை நீர் காத்தது போல, இப்படகையும் (…………) இதில் செல்லும் அனைவரையும் உமது வலக்கரம் காத்தருள்வதாக; அலைமோதும் கடலில் தத்தளித்த புனித பேதுருவை உம் திருமகன் கை நீட்டிப் பிடித்துக் காத்ததுபோல், இவர்களோடு உமது உதவி தவறாது என்றும் இருப்பதாக; கடும் புயலில் சிக்குண்ட தம் சீடரின் படகு மூழ்கிவிடாமல் அவர் காற்றையும் கடலையும் கடிந்து அமைதிப்படுத்தியது போல, ஆற்றல் மிகுந்த உமது அருள் துணையால் இக்கலமும் இதனைப் பயன்படுத்தும் மக்களும் இடர் அனைத்தையும் மேற்கொண்டு, நலமாகத் துறை சேர்ந்து, மகிழ்ச்சியுடன் உமக்கு நன்றிப் பண் பாடுவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(வலை, தூண்டில் போன்ற மீன்பிடிக் கருவிகளை மந்திரிக்கக் குரு சொல்வதாவது:)

குரு: மன்றாடுவோமாக:

எம் இறைவனாகிய ஆண்டவரே, உலர்ந்த நிலத்திலிருந்து நீரைப் பிரித்துக் கடலை உருவாக்கினீர்; கடலில் வாழும் மீன் இனங்களைப் படைத்து, அவை எல்லாம் மனிதரின் தேவைகளுக்கு உதவிட ஏற்பாடு செய்தீர்; திருத்தூதர்கள் வீசிய வலையை அற்புதமாக மீன்களால் நிரப்பினீர்; உம்முடைய அடியார்கள் இவர்கள் இந்த மீன் பிடிக் கருவிகளை முறையாகப் பயன்படுத்தவும், அதனால் தங்கள் உழைப்பிற்கு ஏற்றவாறு மிகுந்த மீன்பாடு பெற்று வளமுடன் வாழவும், எம் நாட்டின் கடலுணவு உற்பத்தியில் பங்கேற்கவும் அருள்வீராக. இவ்வாறு இவர்கள் இவ்வுலகில் பேறுபலன்களை மேன்மேலும் சேர்த்து, முடிவில்லாப் பேரின்பத் துறைக்கு வந்து சேரும் நல்ல கிறிஸ்துவ மக்களாகத் திகழ்வார்களாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(படகு, மற்றும் கருவிகள் மீது குரு தீர்த்தம் தெளிக்கிறார். பின்னர், அவர் இறையாசி அளித்து நிறைவு செய்வார்.)

எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவியின் ஆசீர் உங்கள் அனைவர்மீதும் இப்பொருட்கள் மீதும் இறங்கி என்றும் தங்கியிருப்பதாக.

எல்: ஆமென்.

(பொருத்தமான பாடல் பாடலாம்.)

கணினியை (அச்சகத்தை) மந்திரித்தல்

(இதை அச்சகத்திற்கு ஏற்றவாறும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.)

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

எல்: உம்மோடும் இருப்பாராக.

அருள்வாக்கு 2கொரி 3:2-3

யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில் எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே. எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. அது மையினால் எழுதப்பட்டது அல்ல; மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது. கற்பலகையில் அல்ல, மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா 8:1, 3-4,5-6 

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது.

1. ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. - பல்லவி 

2. உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

3. ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

நற்செய்தி லூக்கா 8:16-19

அக்காலத்தில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர். எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது: ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

விசுவாசிகளின் மன்றாட்டு

குரு: அன்புக்குரியவர்களே! நம் சகோதர சகோதரிகளுக்குச் சமூகத் தொடர்புச் சாதனங்கள் வழியாகக் கிறிஸ்துவைப் பறை சாற்றுகின்ற நாம் நம் உள்ளத்தை இறைவன்பால் எழுப்பி, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால், நம் மன்றாட்டுக்களை எல்லாம் வல்ல இறைவனிடம் சமர்ப்பிப்போம்.

1. திருமுழுக்குப் பெற்ற நாங்கள் அனைவரும், எமது அன்றாட வாழ்விலும் அதன் சூழலிலும், எமக்காக மரித்து உயிர்த்த இயேசுகிறிஸ்துவைப்பற்றி அனைவருக்கும் ஆர்வத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று, ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. சமூகத் தொடர்புச் சாதனத்துறையில் பணியாற்றும் இறைமக்கள், இச்சாதனங்கள் வழியே நற்செய்தியை அறிவிக்கும் பணியில் அச்சமின்றியும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். 

3. தகவல் தொடர்புச் சாதன உலகம் படைத்துத் தருகின்ற செய்திகளிலும் நிகழ்ச்சிகளிலும் உண்மையானவற்றையும் ஆக்கப்பூர்வமானவற்றையும் தங்கள் குழந்தைகள் தேர்ந்துகொள்ள உதவும் வகையில், குடும்பங்களில் உள்ளவர்கள், தூய ஆவியினால் ஒளியூட்டப் பெற்று வழிகாட்ட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

4. சமூகத் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிறிஸ்துவுக்குச் சாட்சி சொல்லும் உன்னதப் பணியினைத் திருச்சபையும் பங்குக் குழுக்களும், உற்சாகத்துடன் செயல்படுத்த வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

5. தகவல் தொடர்புச் சாதனங்களின் உரிமையாளர்களையும், முதலீட்டாளர்களையும், சாதனங்களின் வழியாக நற்செய்தியை அறிவித்துப் பரப்புகின்ற இந்த நிறுவனங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு: செபிப்போமாக:

எங்களில் குடிகொண்டிருக்கும் எங்கள் விண்ணகத் தந்தையே! நாங்கள் உம்மைப் போற்றுகின்றோம். நீர் மனித வாழ்வை ஒவ்வொரு நிலையிலும் மேன்மையடையச் செய்கிறீர்; வளமடையச் செய்கிறீர். புதிய கருவிகளை உருவாக்கவும் அவற்றை நன்முறையில் பயன்படுத்தவும் மனிதனுக்கு ஆற்றல் அளிக்கின்றீர். அந்த ஆற்றலின் விளைவாக இங்கு இருக்கும் கணினியையும் (மற்ற சமூகத் தொடர்புச் சாதனங்கள்) இதைப் பயன்படுத்துபவர்களையும் ஆசீர்வதியும். இவை வெறும் படைப்புப் பொருள்கள் அல்ல; மாறாக, உமது மீட்புச் செய்தியை அறிவிக்கும் கருவிகள். உமது மகனும் எங்கள் மீட்பருமாகிய கிறிஸ்துவை எடுத்துச் சொல்லும் இதயங்களாக இவையும் நாங்களும் மாற அருள்புரிவீராக. எங்கள் ...

(குரு கணினியை மந்திரித்தல்)

(நன்றிப்பாடல் பாடுதல்)

தொழில் கருவிகளை மந்திரித்தல்

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவருடைய பெயரால் இங்கு ஒன்று கூடியிருக்கும் தொழிலாளர்களாகிய நம் ஒவ்வொருவரையும், நம் உழைப்பிற்கு உதவும் கருவிகளையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்ணவேண்டும் என்னும் நியதியைத் தந்திருக்கும் இறைவன் இக்கருவிகளைப் பயன்படுத்துவோரைப் பாதுகாப்பாராக.

எல்: ஆமென்.

முன்னுரை

இன்று பாரத நாடெங்கும் மக்கள் (ஆயுத பூசை என்ற பெயரில் பெருவிழா எடுத்து) படிப்படியாகத் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காணத் தேவைப்படும் படைக்கலன்கள், கருவிகள், கல்வி அறிவூட்டும் ஏடுகள் அனைத்தையும் இறைவன் முன் படைத்து அவற்றை ஆசீர்வதிக்கும்படி இறைஞ்சுகின்றனர். நாமும் நமது உழைப்பிற்கு உதவும் கருவிகள் அனைத்தையும் ஆண்டவருக்கு உகந்த காணிக்கையாக்குவோம். கடந்த ஆண்டு முழுவதும் நம் உழைப்பிற்குத் தேவையான உடல் உரமும், உள்ள பலமும் இறைவன் தந்தமைக்கு நன்றி கூறுவோம். குறிப்பாக, நம் ஒவ்வொருவரையும் தமது அன்பிலும் அமைதியிலும் வைத்துப் பாதுகாத்து, உழைப்பிற்குத் தகுந்த பலன் தந்தமைக்கு நம் இதயம் கனிந்த நன்றியைச் சமர்ப்பிப்போம்.

(சிறிது நேரம் மௌனம்)

நன்றி கூறல்

பதிலுரை : ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

1. இறைவா, கடந்த ஆண்டு முழுவதும் பருவ மழையைப் போதிய அளவு தந்து, வறண்டு கிடந்த நிலத்தை வளமுறச் செய்தமைக்கு ..

2. உழைப்பதற்குத் தேவையான கருவிகள், மற்றும் பொருட்கள், வீரிய விதைகள் அனைத்தையும் போதிய அளவு பெற்றுக் கொள்ள வழிவகுத்தமைக்கு ..

3. நாங்கள் வேலை செய்யும்போது எதிர்பாராமல் ஏற்படக்கூடிய எல்லா ஆபத்துகளினின்றும் எங்களைப் பாதுகாத்தமைக்கு ..

4. உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தந்து எங்கள் வாழ்வு மேன்மேலும் உயர்வுபெற வழிகாட்டி வருகின்றமைக்கு ..

5. தொழிலாளர், பணியாட்கள் அனைவருடைய குடும்பங்களையும் ஆசீர்வதித்து அவர்கள் தேவைகளை நிறைவு செய்தமைக்கு ...

அருள்வாக்கு 2 தெச.3:6-13

அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லாச் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.

எங்களைப்போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப்போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.

'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோது உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம். சகோதர சகோதரிகளே! நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

மன்றாட்டுகள்:

குரு: ஆதிப்பெற்றோர் காலத்திலிருந்தே நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு உழைப்பது நியதியாயிற்று. துன்பமின்றி இன்பமில்லை. இவ்வுலக வாழ்வில் நிறைந்த சுகமும் இன்பமும் அனுபவிக்க விரும்பும் நாம் மறுமையிலும் ஈடில்லா இன்பம் பெறப் பாடுபட்டு உழைக்க வேண்டும். நம் ஒவ்வொருவரையும், நம் வேலையையும், வேலைகளுக்கு உதவும் எல்லாக் கருவிகளையும் பொருட்களையும் நம் தந்தையாகிய இறைவன் ஆசீர்வதிக்கும்படி மன்றாடுவோம். 

1. அன்புத் தந்தையே, தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித யோசேப்பின் வழியைப் பின்பற்றி, நாங்கள் அனைவரும் நீதி, நேர்மை, பொறுப்புணர்வோடு உழைக்க வரமருளும். 

எல்: ஆண்டவரே, எங்கள் உழைப்பையும் இக்கருவிகளையும் ஆசீர்வதியும்:

2. மனிதனின் திறமையாலும் உழைப்பாலும், படைப்பையும் உலகையும் மேன்மைப்படுத்தத் திருவுளம் கொண்டிருக்கும் இறைவா, கடின உழைப்பை மேற்கொள்ளும் தொழிலாளிகள் அனைவரையும், அவர்களின் குடும்பங்களையும் ஆசீர்வதித்து, அவர்கள் வாழ்வு உயர்வுபெற அருள்புரியும். 

3. தொழிற்சாலைகளில் விசைக் கருவிகளைப் பயன்படுத்திப் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் உடலில் பலமும் உள்ளத்தில் வலிமையும் ஈந்து, எதிர்பாராமல் நேரிடக்கூடிய எல்லா விபத்துக்களினின்றும் அவர்களைப் பாதுகாத்தருளும். 

4. நிலத்தில் பாடுபடும் விவசாயிகள் தங்கள் வாழ்வில் மன நிறைவுபெறப் போதுமான பருவ மழையைத் தந்து நல்ல விளைவை அளித்தருளும்.

5. முதலாளிகள் மனித மாண்பை மதித்து கனிந்த உள்ளம் கொண்டவர்களாய், உண்மை, நீதி, நேர்மை ஆகிய நற்பண்புடையவர்களாய் வாழ வரமருளும்.

6. வாழ்விற்கு உதவும் கருவிகளை எளியோரும் பெற்று, தம் தொழிலிலும் வாழ்விலும் வளம் பெற அருளும்.

7. வேலை வாய்ப்பின்றித் தவிப்போர் அவரவர் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப வேலை வாய்ப்புப் பெற்று வாழ்வில் உயர்வு பெற உதவி அளித்தருளும்.

குரு: மன்றாடுவோமாக:

எல்லாம் வல்ல அன்பு இறைவா, இங்குக் குழுமியுள்ள உமது மக்களின் விண்ணப்பங்களுக்குக் கனிவாய் செவிசாய்த்தருளும். இவர்கள் உம்மீது ஆழ்ந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டு விரும்பி மன்றாடுவதை ஏற்றருளும். இவர்களின் உழைப்பை ஆசீர்வதித்து, மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் வளம் பெற அருள் தாரும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

சிறப்பு ஆசீர்

குரு: நன்மையே உருவான நம் ஆண்டவர், நம் அனைவருக்கும் உழைப்பதற்குத் தேவையான உடல் நலமும், உள்ள உறுதியும் தந்து, தீங்கனைத்திலிருந்தும் நம்மைப் பாதுகாப்பாராக.

எல்: ஆமென்.

குரு: நாடெங்கிலும் நீர் வளமும் நிலவளமும் பெருக, எளிய மக்கள் அனைவரும் பஞ்சம், பசி, பிணி நீங்கி நலமுடன் வாழ அருள்புரிவாராக.

எல்: ஆமென்.

குரு: உழைப்பிற்கு உதவும் இக்கருவிகள் அனைத்தும் தகுதியான முறையில் பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படத் துணைபுரிவாராக.

எல்: ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, என்றும் தமது அன்பிலும் அமைதியிலும் வைத்துப் பாதுகாப்பாராக.

எல்: ஆமென்.

ஊர்தியை மந்திரித்தல்

(வண்டி, மிதிவண்டி, மோட்டார் வண்டி ஊர்திகள் முதலியன.)

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

எல்: உம்மோடும் இருப்பாராக.

அருள்வாக்கு ரோமையர் 8:18-23

இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர் நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

(அல்லது)

மாற்று வாசகம் 2 சாமு 6:1-5, 11

(கடவுளின் பேழை புது வண்டியில் வைத்துக் கொண்டுவரப்படுதல்.)

(மறையுரை : படைப்பு அனைத்தும் இறைவனை மகிமைப்படுத்தி, அவரது திட்டத்தை நிறைவேற்றப் பயன்படுகிறது. மீட்புப் பெற்று மனிதனின் மகிமையில் பங்கு பெறும்.)

பதிலுரைப்பாடல் திபா. 121: 1, 3, 5-6, 7-8.

பல்லவி: ஆண்டவரே எம்மை வழிநடத்துவீராக.

1. மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். - பல்லவி

2. அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை. - பல்லவி

3. ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. - பல்லவி

4. ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். - பல்லவி

(அல்லது)

மாற்றுத் திருப்பாடல் 139

(தேவைப்பட்டால்)

நற்செய்தி வாசகம்: லூக். 19:28-35a (இயேசு எருசலேமில் நுழைதல்) 

குரு: மன்றாடுவோமாக:

அனைத்துலகாளும் அரசே! எம் இறைவா! நீர் என்றும் போற்றப்படுவீராக. உம் திருமகன் வழியாக நீர் அனைத்தையும் படைத்துப் பாதுகாக்கின்றீர். உமது ✠ ஆசியை இந்த …………. (வண்டி)க்கும். இதனைப் பயன்படுத்துவோர்க்கும் தயவாய் அளித்தருளும். உமது படைப்பாகிய இந்த …………………. ஐ உமது திருவுளத்திற்கேற்பப் பயன்படுத்தி, தங்களுக்கும் பிறருக்கும் இதனால் தீங்கிழைக்காது. தங்கள் வாழ்வை மேன்மைப்படுத்திக் கொள்வார்களாக. இதனை இவர்கள் தங்கள் நல்வாழ்வுக்கும், பிறர் நலச் சேவைக்கும் திருச்சபையை வளப்படுத்துவதற்கும் பயன்படுத்தி உமது மகிமையையும் புகழையும் பறைசாற்றுவார்களாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)