மாமன்னன் உலகினிலே இன்று பிறந்தார் மாடடையும் தொழுவினிலே கண்கள் திறந்தார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மாமன்னன் உலகினிலே இன்று பிறந்தார்

மாடடையும் தொழுவினிலே கண்கள் திறந்தார் (2)

மாமரியின் கைகளிலே தன்னை மறந்தார்

மாமுனியின் உறவினிலே உள்ளம் மகிழ்ந்தார் (2)

மங்களங்கள் பாடுவோம் மன்னன் வரவிலே

நெஞ்சிலிட்டுப் பாடுவோம் குழந்தை உறவிலே (2)


1. மார்கழிமாதக் குளிரில் பிறந்ததும் ஏனோ

மன்னவனாய் இந்நிலையில் உதித்ததும் ஏனோ (2)

பூவிழியில் நீர்திரள அழுததும் ஏனோ

புல்லணையில் கண்வளர வருந்துதல் ஏனோ (2)

மானிடரின் வாழ்வினிலே மகிழ்வைக் கொடுக்க

மண்ணில் வந்த குழந்தையே எங்கள் தெய்வமே (2)

மங்களங்கள் பாடுவோம்


2. வானக உறவை ஒதுக்கி வைத்ததும் ஏனோ

வையகம் வந்து குளிரில் நடுங்குதல் ஏனோ (2)

தேன் மதுரக் குழலோசை பிரிந்ததும் ஏனோ

தெய்வீகப் பொன்முடியைத் துறந்ததும் ஏனோ (2)

பாவிகளை மீட்பதற்கு வந்த தெய்வமே

புத்துலகம் செய்வதற்கு எங்கள் தஞ்சமே (2)

மங்களங்கள் பாடுவோம்