5-ம் துக்கத் தேவ இரகசியம்

பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற பரம தாயாரே, உம்முடைய திருக்குமாரன் சேசுநாதரை யூதர்கள் சிலுவை மரத்தோடு சேர்த்துச் சொல்லிலடங்காத கொடுமையாய் அவருடைய திருக் கைகளையும் கால்களையும் பார இருப்பாணி களால் தரித்து (வைத்து) இரு கள்வருக்கு நடுவே எடுத்து நாட்டின பின்பு, மகா அவமானத்தோடே அவர் தொங்கி இருக்கின்றதைக் கண்டதினாலே, மட்டிலடங்காத துக்க வியாகுலப்பட்டீரே, நீர் உமது மனதிலே அனுபவித்த அவருடைய பீடைகளையும் சிலுவையையும் பார்த்துப் பாவிகளாயிருக்கிற அடியோர்கள் அந்தத் திவ்விய மாதிரிகையைக் கைக்கொண்டு, நல்வழி நடந்து பாவப் பொறுத்தல் அடையத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும், - பத்து அருள். ஒரு திரி.

அப்போஸ்தலராயிருக்கிற அர்ச். அருளப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிராத்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.