ஆத்தும சரீர பரிசுத்தக் கற்படைய மன்றாட்டு

பாலியப்பருவமுள்ள ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் ம் ஆத்தும சரீர பரிசுத்தக் கற்படைய மன்றாட்டு

சர்வ வல்லவரும் எல்லாவற்றையும் பார்க்கிறவருமாகிய சர்வேசுரா! - என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சணச் சாயலாக உண்டாக்கினீரே. அதை நான் அசுத்தப்படுத்தாதபடிக்கு எனக்கு அனுக்கிரகம் செய்தருளும். 'நமது தேவாலயத்தை யாதாமொருவன் அசுத்தப்படுத்தினால், அவனைச் சிதைப்போம்' என்று திருவுளம்பற்றினீரே, சுவாமி உமது வேத மொழியின் படியே என் சரீரமே உமது தேவாலயமாயிற்று. அதிலே உமது இஷ்டப்பிரசாதத்தினால் தேவரீருடைய இஸ்பிரீத்து சாந்து வானவர் வாசம் செய்யச் சித்தமாயிருக்கிறதுமன்றி, அநேகமுறை உம்முடைய திருக் குமாரனாகிய சேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து அதனை அர்ச்சித்தருளினார். ஆகையால் பரிசுத்தமுள்ள கர்த்தாவே! உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும். கற்புக்கு விரோதமான ஓர் அற்ப மாசும் என் ஆத்துமத்திலாவது சரீரத்திலாவது உண்டாகாதபடி கிருபை செய்தருளும். என் திவ்விய இரட்சகரான சேசுவே! இந்த விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது விசேஷமான அநுக்கிரகம் வேண்டியிருக்கிறதினால், கற்பை விரும்புகிறவரும், கன்னியாஸ்திரிகளுக்கு நிறைந்த தயையுள்ள இராசாவுமாகிய தேவரீர் பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன். உம்முடைய வரப்பிரசாதத் தினால் எத்தனையோ பேர்கள் இவ்வுலகத்தில் சம்மனசுகளைப் போல பரிசுத்தமாய் நடந்தார்கள். அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள்? ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப் போக நியாயமில்லை. மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே! தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினதுபோல என்னையும் தூய நெறியில் உறுதிப் படுத்தியருளும். அவர்களாலானது போல உம்மைக்கொண்டு என்னாலும் எல்லா நலமும் ஆகக்கூடும். உமது தோத்திரத்துக்கும் இரட்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு தன் சோதனையால் என்னை மயக்குவித்து ஜெயிக்காதபடிக்கு அடியேன் இடைவிடாமல் சுறுசுறுப்போடு வேண்டிக்கொள்ளவும், என்மேல் காவல் காத்து எச்சரிக்கையோடு நடக்கவும் தயை புரியும். நான் என் புத்தி நினைவைத் திடமாய் ஒழுங்குபடுத்தி, என் பொறிகள் ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப் பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி, என்னை அசுத்தப்படுத்துவதான எல்லா வற்றையும் மகா அருவருப்புடனே வெறுத்து, ஓர் அற்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி, நுணுக்கமான பக்தியுடன் சுமுத்திரையாய் நடந்து, மிகப் பூச்சியமும் மழுங்குதற்கு எளியதுமாகிய இந்தப் புண்ணியத்தைப் பழுதில்லாமல் காப்பாற்ற அநுக்கிரகம் செய்தருளும்.

மகா பரிசுத்த மாதாவே! எனக்கு அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடி எனக்குப் பரிசுத்தமான இருதயத்தைக் கொடுத்தருளும். எனக்குக் காவலான சம்மனசானவரே, சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும், ஆமென்.