கர்ப்ப வாதைப்படுகிறவர்களுக்காக வேண்டுதல்

நீதியும் தயையுமுள்ள சர்வேசுரா! ஆதித்தாயாகிய ஏவை உமது கற்பனையை மீறிச் செய்த பாவத்துக்காக அவளால் பலுகுகிற சகல பெண்களும் கர்ப்ப வாதையோடு பிள்ளை பெறத் தீர்வையிட்டருளினீரே. அந்தத் தீர்வை பலித்து, இந்தப் பெண்ணும் இவள் வயிற்றிலே உமது கருணையால் உற்பவித்த பிள்ளையும் மகா வேதனையை அனுபவிக்கிறதினாலே கருணாசமுத்திரமான பிதாவே! தேவரீர் தயாபர கடாட்சத்தால் இவளை நோக்கி உம்முடைய திருக் குமாரனுடைய பரிசுத்த மாதா ஒரு வேதனையுமில்லாமல் அற்புதமாய்ப் பிறசவிக்க வரம் கொடுத்ததைப் பார்த்து, அந்த அமலோற்பவியான கன்னிமரியாயினுடைய பேறுகளினாலேயும், வேண்டுதலினாலேயும், இந்த பெண் மேல் இரக்கம் வைத்து, இவள் படுகிற கடின வாதையை நீக்கி இரட்சித்தருளும் சுவாமீ. அப்படியே சுகமாய்ப் பிள்ளை பெற்று உம்மை ஸ்துதிக்கக் கோயிலுக்குச் செல்லவும், பெற்றப் பிள்ளையை ஞானஸ்நானத்தினால் தேவரீருக்கே பிள்ளையாகச்செய்து அதை உமது திருப் பணிவிடைக்கு வளர்க்கவும் கிருபை செய்தருளும், ஆமென். ஒரு பர.