கடைசி வேண்டுதல்

மட்டில்லாத தயைசுரூபியாயிருக்கிற நித்திய சர்வேசுரா! - உமக்கு மிகவும் பிரியமுள்ள திருக்குமாரன் மனோவாக்குக் கெட்டாத கொடிய வேதனைப்படவும், அவர் படும் வேதனையைக் கண்டு அவர் திருத் தாயார் சொல்லிலடங்காத வியாகுலப்படவும், எங்கள் பாவம் காரணமாகையால், நாங்கள் பாவத்தின் அகோரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி மனஸ்தாபப்படவும், இனி ஒருநாளும் பாவத்தைச் செய்யாதிருக்கவும், செய்த பாவத்திற்கு தபசு செய்யவும் எங்கள் மேல் உமக்குள்ள மட்டில்லாத சிநேகத்துக்கு எங்களால் ஆன மட்டும் இவ்வுலகில் உம்மை நேசிக்கவும் நித்தியத்தில் இடைவிடாமல் நேசித்து வரவும், உமது சிநேகம் சகல மனிதர் இருதயத்திலும் பற்றி எரியவும், அக்கியானம் குறையவும் சத்தியவேதம் பரவவும் சத்திய இராசாக்கள் தங்களுக்குள்ளே சமாதானமாயிருக்கவும், திருச்சபையை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்ப அதில் பிரவேசிக்கவும், அர்ச் பாப்பு நினைத்த தர்மக் காரியங்கள் ஜெயமாகவும், பஞ்சம் படை நோய்கள் நீங்கவும் உத்தரிக்கிறஸ்தலத்தில் வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் அவதி குறையவும், நான் யாருக்காக வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தேவரீர் திருவுளமாயிருக்கிறீரோ அவர்கள் எல்லோரும் உமது விசேஷ நன்மையைக் கைக் கொள்ளவும், உமது திருக் குமாரன் எங்களுக்காகச் சிந்தின விலைமதியாத் திரு இரத்தத்தையும், அவர் திருத் தாயார் அனுபவித்த சொல்லிலடங்காத வியாகுலத்தையும், சிலுவையின் பேறடைந்த அர்ச்சியசிஷ்டவர்களுடைய வேண்டு தலையும் குறித்து அடியார்கள் கேட்கிற மன்றாட்டுகளுக்கு இரங்கிக் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை இரந்து மன்றாடிக் கொள்ளுகிறோம்.

இடைவிடாமல் ஸ்துதிக்கப்பட தகுதியுள்ளதுமாய் மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம திவ்விய நற்கருணைக்கே அநவரத காலமும் முடியாத ஆராதனையும் ஸ்துதியும் தோத்திரமும் உண்டாக்கடவது. சென்மப்பாவமில்லாமல் உற்பவித்து எப்பொழுதும் பரிசுத்தக் கன்னியுமாய் எமது ஆண்டவளுமாய்க் கொண்டாடப்பட்டவளுமாயிருக்கிற அர்ச். தேவ மாதாவினுடைய அமலோற்பவத்துக்கும் தோத்திரம் உண்டாகக்கடவது. சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே! இதோ உமது சரணமாக ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்கிறதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாய் இருக்கிற நித்தியக் கன்னிகையே, சகல ஆபத்துக்களிலிருந்து எங்களை தற்காத்துக் கொள்ளும். தேவபிரசாதத்தின் தாயே! இரக்கத்துக்கு மாதாவே! அர்ச். மாதாவே! எங்கள் மாற்றானுடைய சோதனை யிலும் மரண நேரத்திலும் உமது திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். எங்களைக் காக்கவும் ஆளவுங் கைக்கொண்டு நடத்தவும் வேண்டுமென்று உமது திருப்பாதத்தை முத்தி செய்து மன்றாடுகிறேன், ஆமென்.