வியாதியில் சொல்லத்தகும் மனவல்லயச் செபம்

தயவுள்ள பிதாவே! உம்முடைய அளவில்லாத கிருபையினால் என்பாவங்களைப் பொறுத்தருளும், மகா பாவியாகிய அடியேன் மேல் இரக்கமாயிரும்.

உம்முடைய நீதிப்பிரகாரமாய் எனக்குப் தீர்வையிடாதேயும். தாயாளமுள்ள கர்த்தாவே! பாவிகளுக்காக உம்முடைய திரு இரத்தத்தைச் சிந்தினீரே, அதில் ஒரு துளியாகிலும் அடியேன் மேல் இரக்கமாய் விழச்செய்து என்னைப் பரிசுத்தனாக்கும்.

ஆ என் நல்ல பிதாவே! தேவரீருக்கு நான் துரோகம் செய்தது எவ்வளவோ அநியாயம், எவ்வளவோ நன்றியறியாமை, என் பாவங்களையெல்லாம் முழுமனதோடு வெறுத்து விடுகிறேன்.

நிஷ்டூர பாவமே! என் திவ்விய கர்த்தரை வாதித்தாய். எனக்கு மோட்ச வாசலை அடைத்து, என்னை நரகத்தின் பயங்கர ஆக்கினைகளுக்கு உள்ளாக்கக் காரணமாயிருந்தாய். உன்னை என்றென்றைக்கும் அருவருத்துத் தள்ளுகிறேன்.

என் பிரிய சேசுவே! என் பாவத்துக்குப்பரிகாரமாக இந்தக் கஸ்திகொடுக்கிறீர். அடியேன்மேல் உமக்குள்ள தயவினாலே என்னைத் தண்டிக்கிறீர். உமக்குத் தோத்திரம் சுவாமீ. உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும் சுவாமீ.

ஆ என் ஆத்துமமே! இந்தக் கஸ்தி உனக்குக் கடினமாய்த் தோன்றுகிறதற்கு நியாயம் இல்லை. உன் பாவங்களுக்கு ஒளஷதம் வேண்டாமோ? பரம கர்த்தர் உன் பாவங்களுக்காக உன்னைப் பார்க்கிலும் எத்தனையோ அதிக கஸ்தி நிர்ப்பந்தம் அனுபவித்தார்.

ஆ என் திவ்விய சேசுவே! மாசில்லாதவராகிய தேவரீர் அடியேனுக்காகப் பொறுமையோடு சகல கஸ்தியும் பட்டிருக்க, பாவியாகிய நான் கஸ்தி பொறுக்காமல் எப்படி முறையிடுவேன் சுவாமீ! எனக்குப் பொறுமை தந்தருளும். தேவரீர் அனுபவித்த கடின பாடுகளையும் மரணத்தையும் பார்த்து என் மரண நேரத்திலே என்னை இரட்சித்தருளும் சுவாமீ.

என் திவ்விய கர்த்தாவே! தேவரீர் திருச்சபையைக்கொண்டு எனக்குப் போதிக்கிறதெல்லாம் உறுதியாக விசுவசிக்கிறேன். என் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்தருளும்.

என் மதுர சேசுவே! எனக்காகக் கடினபாடுகளைப்பட்டு, நிஷ்டூர மரணத்தை அடைந்தீரே, உம்மை நம்பியிருக்கிறவர்களை இரட்சிக்க வார்த்தைப்பாடு கொடுத்தீரே, உம்மை முழுமனதோடு நம்பியிருக்கிறேன். என்னைக் கைவிடாதேயும், என்னைப் பரகதியில் சேர்த்தருளும் சுவாமீ.

மட்டில்லாத சகல நன்மைச் சொருபியாயிருக்கிற சர்வேசுரா சுவாமீ, என் இருதயத்தை முழுதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் அளவில்லாத சிநேகத்துக்குப் பாத்திரமாயிருக்கிற படியினாலே உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். எல்லாவற்றையும் பார்க்கிலும் உம்மை சிநேகிக்கிறேன். சுவாமி, உம்முடைய திவ்விய சினேகத்தின் அக்கினியை என் ஆத்துமத்தில் எரியப்பண்ணும்.

ஆ அன்புள்ள இரட்சகரே! பிரியமுள்ள சேசுவே, என் மேலுள்ள அன்பினால் எனக்காக உம்முடைய பிராணனைத் தந்தீர். உம்முடைய அன்பினால் உமது திருக் கரத்தில் என் பிராணனைவிட ஆசையாயிருக்கிறேன். என் அன்பே, என் சீவியமே, இந்தப் பரதேசத்தைவிட்டு எப்போது உம்முடைய பாக்கியமுள்ள தரிசனையை அடைவேன்?

அர்ச். மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே, தயாளமுள்ள தாயே, எனக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். 

தேவமாதாவே! என் பேரிலே தயையாயிரும், எனக்கு உதவியாயிரும். 

என் காவலான சம்மனசானவரே! இந்த ஆபத்துள்ள வேளையில் இடைவிடாமல் என்னைக் காத்தருளும்.

நான் பேர்கொண்டிருக்கிற அர்ச்சியசிஷ்டவரே! சகல மோட்ச வாசிகளே, அடியேனும் பரகதியை அடைந்து உங்களோடு சர்வேசுரனைத் தரிசித்துக் துதிக்கும்படிக்கு எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சேசு, மரி, சூசை எனக்கு அடைக்கலமாயிருங்கள்.

வியாதிகாரனுடைய இனத்தாரும் சினேகிதருமானவர்களே! இந்த ஆபத்துள்ள சமயத்தில் இவன் ஆத்துமம் பரகதியில் சேரும்படிக்கு உங்களால் இயன்றமட்டும் செபதினாலும் புத்தி சொல்லுதலினாலும் உதவி செய்யுங்கள். இவன் தன் ஆத்தும் காரியத்தை சரியாய்த் தீர்க்கவும், அடிக்கடி சர்வேசுரனை நினைத்து மன்றாடவும் ஏவுதலைச் சொல்லுங்கள். அதனால் இவன் பரகதி அடைந்த பிறகு உங்களை என்றென்றைக்கும் ஆசிர்வதிப்பான். ஆனால் உங்கள் அசட்டையினாலே இவன் நரகத்தின் அக்கினியில் விழுந்தால், இவனுக்கும் உங்களுக்கும் எத்தனையோ கேடாயிருக்கும். இப்போது இவன்மேல் மனமிரங் காமலிருப்பீர்களோ?

நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும், தன்மரணத் தினாலே நித்திய நரக நிர்ப்பந்த ஆக்கினையும் வருகிறபடியால், நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கின்றது. நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும் சுத்திகாம் பிரதானமாயிருக்கிறபடியினால். உனக்குச் சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப்போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமல்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றங் கொள்ளும் போது குருவானவரை அழையாமல், நல்ல நினைவு இருக்கும் போதே குருவானவரை அழைத்து பாவசங்கீர்த்தனம், தேவ நற்கருணை அவஸ்தைப்பூசுதல் இவைகளை உத்தம விதமாய்ப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக முயற்சிகளையும், உத்தம மனஸ்தாப பரமண்டல, மங்கள வார்த்தை மந்திரங்களையும் செபித்து, இதனடியில் வரும் செபத்தையும் செபித்துக்கொண்டு வருவாயாக.